Wednesday, March 28, 2012

உருளைக்கிழங்கு குருமா

"இந்த குருமாவுக்கு ரிச் பொட்டட்டோ குருமான்னு பேரு வைக்கணும்"..அப்படின்னு நினைச்சு டைப் பண்ண ஆரம்பிச்சேன். ஒடனே மூளைக்குள்ளாற தூங்கிகிட்டிருந்த சிங்கம் எந்திரிச்சிரிச்சு..அதென்ன "ரிச்" பொட்டட்டொ குருமா?? பணக்காரக் குருமாவா?? இல்ல பணக்கார உருளைக்கிழங்கா..இப்படி பல்வேறு பதில் தெரியாத கேள்விகளால் மண்டையக் குடைய ஆரம்பிச்சிதா..அதனால வெறும் "உருளைக்கிழங்கு குருமா"னே டைட்டில் வைச்சிட்டேன். :)))))

குருமாவில் சேர்க்கும் எண்ணெய், தே.பால்,எவாப்பரேடட் மில்க் இதெல்லாம் சேர்ந்து நல்ல ரிச்சான சுவையைக் கொடுக்கும், பார்ட்டிகளுக்கு செய்வதற்கு பொருத்தமான டிஷ் இது! :)

தேவையான பொருட்கள்
உருளை கிழங்கு -2
தக்காளி-2
தேங்காய்ப்பால் பவுடர்- 11/2 டேபிள்ஸ்பூன்
எவாப்பரேடட் மில்க் - 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
மிளகாய்த்தூள்-1/2டீஸ்பூன்
மல்லித்தூள்-1டீஸ்பூன்
பிரியாணி இலை -1
கசூரி மேத்தி -1 டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு

அரைத்துக்கொள்ள
கொத்துமல்லி/தனியா - 1டீஸ்பூன்
வரமிளகாய்-2
சீரகம்-1/2டீஸ்பூன்
சோம்பு-1/2டீஸ்பூன்
மிளகு-1/2டீஸ்பூன்
பட்டை-சிறுதுண்டு
கிராம்பு-2
ஏலக்காய்-1

வெங்காயம்-1
பச்சைமிளகாய்-1
இஞ்சி-சிறுதுண்டு
பூண்டு- 3 பற்கள்

செய்முறை

1.வெங்காயம்-மிளகாயை பெரிய துண்டுகளாக நறுக்கவும். இஞ்சியைத் தோல் சீவி, பூண்டை உரித்துக்கொள்ளவும்.

2.தனியா முதல் ஏலக்காய் வரை இருக்கும் பொருட்களை மிக்ஸியில் போட்டு கொறகொறப்பாகப் பொடித்துக் கொண்டு, அதனுடன் வெங்காயம்-ப.மிளகா,இஞ்சி-பூண்டு சேர்த்து 2-3 முறை பல்ஸில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.

4. கடாயில் எண்ணெய் காயவைத்து ஒரு பிரியாணி இலையைப் பொரியவிடவும், அதனுடன் ஒரு டீஸ்பூன் கசூரி மேத்தியை சேர்த்து, அரைத்து வைத்த மசாலாவையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

5.மசாலா வதங்கியதும் நறுக்கிய தக்காளி,மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

6.நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.

7.கிழங்கு பாதி வெந்ததும் தேங்காய்ப்பால் பவுடரை சுடுநீரில் கலக்கி ஊற்றி நிதானமான தீயில் கொதிக்கவிடவும்.

8. குருமா நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் எவாப்பரேடட் மில்க்-ஐ ஊற்றி குறைந்த தீயில் சிலநிமிடங்கள் கொதிக்க விடவும்.

9.கொத்துமல்லி இலை தூவி குருமாவை அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுவையான கமகம குருமா ரெடி..பரோட்டா,சப்பாத்தி,பிரியாணி, இட்லி-தோசை-ஆப்பம் இவற்றுக்கு பொருத்தமாக இருக்கும்.
~~~
கடந்த வாரம் வீடு மாறினோம், இதே அப்பார்ட்மென்டில் வேறொரு வீட்டிற்கு வந்திருக்கிறோம்,அது பற்றிய ஒரு பதிவைப் போட்டேன், அதற்கு கருத்தும் வாழ்த்தும் தெரிவித்த கிரிஜா,ராதை & இமா றீச்சருக்கு நன்றிகள்!
~~~

Thursday, March 22, 2012

காய்கறி இடியாப்பம் - Stringhopper with Vegetables

தேவையான பொருட்கள்
இடியப்பம் - 11/2கப் மாவில் செய்தது
கேரட்-1
பீன்ஸ்-5
உருளைக்கிழங்கு -பாதி
பச்சைப்பட்டாணி - ஒரு கைப்பிடி
வெங்காயம் -1
பச்சைமிளகாய்-1
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1/2 டீஸ்பூன்
சக்தி கறிமசாலா தூள் -1டீஸ்பூன்
கடுகு -1/2டீஸ்பூன்
க.பருப்பு,உ.பருப்பு -தலா 1 டீஸ்பூன்
சோம்பு -1 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை
இடியப்பத்தை உதிர்த்து வைக்கவும்.
கேரட்-பீன்ஸ்-உருளைக்கிழங்கை கழுவிப் பொடியாக நறுக்கி காய்கள் மூழ்குமளவு தண்ணீர் விட்டு 2 நிமிடங்கள் மைக்ரோவேவ் செய்யவும். சிறிது நேரம் கழித்து காய்களை எடுத்து, அவற்றுடன் ஃப்ரோஸன் பட்டாணி, காய்களுக்குத் தேவையான உப்பு சேர்த்து 30 நொடிகள் மைக்ரோவேவ் செய்து வைக்கவும்.
வெங்காயம்,பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காயவிட்டு கடுகு-சோம்பு பொரியவிடவும். க.பருப்பு-உ.பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு வெங்காயம்-ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் வேகவைத்த காய்களைத் தண்ணீர் வடித்துவிட்டு சேர்த்து,மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தேவையான உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
சக்தி கறிமசாலா சேர்த்து பிரட்டிவிடவும். மசாலா வாசம் அடங்கியதும் உதிர்த்த இடியப்பம் சேர்த்து கிளறவும்.
காய்கறி மசாலாவுடன் இடியப்பம் நன்கு கலந்து சூடானாதும் மல்லி இலை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான வெஜிடபிள் இடியப்பம் தயார்.

விருப்பமான சட்னி/ஊறுகாய் அல்லது தயிருடன் ருசிக்கவும். கீழே படத்தில் இடியப்பத்துடன் இருப்பது தக்காளித் தொக்கு..:P :P
பின்குறிப்பு
காய்களுடன் உப்பு சேர்த்து வேகவைக்கிறோம்,இடியப்பத்திலும் உப்பு சேர்த்திருக்கலாம், சேராமலும் இருக்கலாம், அதற்கேற்ப உப்பு கவனமாக சேர்க்கவும்.
இடியப்பம் ரெசிப்பியைத் தமிழில் பார்க்க இங்கேயும், ஆங்கிலத்தில் பார்க்க இங்கேயும் க்ளிக்கவும்.
 ~~~
Sending this recipe to Bachelor's Feast event happening at Jaleelaa akkaa's Samaiyal attakaasam



Tuesday, March 20, 2012

Kid in a Candy Store...

என்ன பாக்கறீங்க? இதென்ன ஃபோட்டோ..எதைப்பத்தி பதிவுன்னுதானே?? :) கொஞ்ச நாட்கள் முன் நாங்க போன ஒரு டிரிப்பில ஒரு சாக்லேட் ஃபேக்டரிக்குப் போனோம். அங்கு வாங்கிய ஒரு நினைவுப்பொருள்தான் முதல் படத்தில் இருப்பது. பதிவும் அந்த ஃபேக்டரியைப் பற்றித்தான்...ம்ம்..இப்ப ' Today I Feel...Bored! ' சொல்வது உங்க டர்ன்! ஹாஹா! :)

Ethel M Chocolate ஃபேக்டரி லாஸ் வேகாஸில் இருக்கிறது. வாரநாட்களில் சாக்லேட் ஃபேக்டரியில் நடக்கும் வேலைகளை ஒரு டூராகப் பார்க்க வசதி செய்திருக்கிறார்கள். சாக்லேட் ஃபேக்டரியில் நுழையும் முன்பே வாசலில் கள்ளித் தோட்டம்(Cactus garden) ஒன்றும் நம்மை வரவேற்கிறது.

ஃபேக்டரியின் உள்ளே நுழைந்ததும் நீளமான காரிடாரில் ஒரு புறம் சுவற்றில் சாக்லெட் கண்டுபிடிப்பு, உற்பத்தி, பல்வேறு இடங்களில் இருக்கும் மற்ற ஃபேக்டரிகள் பற்றிய தகவல்கள் அழகாகப் படங்கள் மற்றும் வீடியோவுடன் அமைக்கப்பட்டு இருக்கின்றன. காரிடாரின் மறுபுறம் கண்ணாடிச் சுவர்..அதற்கப்பால் சாக்லேட் ஃபேக்டரியில் பலவித சாக்லேட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. நட் வகைகளை அரைக்கும் இயந்திரங்கள், சாக்லேட்டை உருக்கும் எந்திரங்கள் ஒரு ஓரம் உள்ளன. மற்றும் பல்வேறு இயந்திரங்கள் உதவியுடன் ஆட்கள் மும்முரமாக வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இங்கே மில்க் சாக்லேட் வகைகள் உருவாகின்றதாம். சாக்லேட்களை உருக்கி அச்சுக்களில் வார்த்து கூலிங் டன்னல்(cooling tunnel) வழியே அனுப்புகிறார்கள். பத்தடி நீளமிருக்கும் குளிரூட்டியில் சாக்லேட்டுகள் இறுகி, அச்சுக்களில் இருந்து அழகாகக் கழன்று வெளியே வருகின்றன. அட்டைப்பெட்டிகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கும் தயாராகின்றன. அந்த ஃபேக்டரி ஹாலினை ரசித்து விட்டு வெளியே வரும் வழியருகே நாம் ருசிக்க சாக்லேட்டுகளைத் தந்து நாம் கேட்கும் சந்தேகங்களையும் தீர்த்துவைக்க ஒரு பெண்மணி இருக்கிறார்.

இதயவடிவ சாக்லேட், அதனுள்ளும் குட்டிக் குட்டி இதயங்கள்! :)

வெளியே வந்ததும் அங்கேயே சாக்லேட்களை விற்பனை செய்யும் ஒரு விசாலமான கடை இருக்கிறது. சாக்லேட்ஸ், சிறிய நினைவுப்பொருட்கள், டி-ஷர்ட்ஸ் மற்றும் நானாவிதப்பொருட்கள் இருக்கின்றன. நாங்கள் போனது வாலன்டைன்ஸ் டே சமயத்தில் என்பதால் இந்த இதய வடிவ சாக்லேட்ஸ் அதிகம் டிஸ்ப்ளேயில் இருந்தது.

சாக்லேட் ஃபேக்டரியில் இருந்து வெளியே வந்தால் பலவகையான கள்ளிச்செடிகள்/ கள்ளிமரங்கள் நிறைந்த தோட்டம் இருக்கிறது. நாங்கள் போன சமயம் நல்ல குளிரும் காற்றுமாக இருந்தது. விதவிதமான உருவங்களில், உயரங்களில் கள்ளிகள் வைத்திருக்கிறார்கள். படத்தில் இடது மூலையில் இருக்கும் "சோயா காக்டஸ்" செடிகளை நினைவிருக்கா உங்களுக்கு? ;) இல்லைன்னா அதைப்பற்றிய தனிப்பதிவு இங்கே..

நிதானமாகக் கள்ளித்தோட்டத்தை ரசிக்க விடாமல் எலும்பைத் துளைக்கும் குளிர்க்காற்று விரட்டவே, அப்படியே அடுத்த இடத்துக்கு நகர்ந்தோம். M&M சாக்லேட் ஸ்டோர்ஸின் கடை அது. அழகழகான பேக்ஸ், டாய்ஸ், சாக்லேட்ஸ் என்று கண்ணைக்கவரும் பொருட்கள் தகதகவென்று இருந்தன.

அங்கே வாங்கியதுதான் இந்த ஃப்ரிட்ஜ் மேக்னட்! க்யூட்டான எம் & எம் பொம்மை..ஒவ்வொருநாளும் நம் மூடிற்கு ஏற்ப மேக்னட்டை அப்டேட் செய்துகொள்ளலாம். :)))

சரி,பதிவு ரொம்ப மொக்கையா இருந்துதுன்னா கோவப்படாதீங்க, இந்தாங்க, லட்டு!! சாப்ட்டு சந்தோஷமாக் கமென்ட்டையும் போட்டுட்டுப் போங்க. ;) ;)

டாட்டா,பை,பை!

Friday, March 16, 2012

சாம்பார் இட்லி

சமீபத்தில் இந்த அழகான சாம்பார் இட்லித்தட்டுகள் வாங்கினோம். என்னிடம் இட்லிக்கு என தனியாக குக்கர் இல்லை , 5 லிட்டர் ஹாக்கின்ஸ் குக்கரில்தான் இட்லி செய்வது வழக்கம். இந்த உயரமான 6 ப்ளேட் சாம்பார் இட்லி ஸ்டாண்ட் குக்கரில் வைக்க முடியலை..நல்ல வேளையாக இட்லிப்பாத்திரத்தில் ஓரொரு தட்டாக வைக்க முடிந்தது. அதனால் அளவாக 2 தட்டுகளை மட்டும் எடுத்து இதயம் நல்லெண்ணெய் தடவி குட்டி இட்லி செய்தாச்சு. :))))

ஆனா கொஞ்சம் பொறுமை வேணும்ங்க..18 குழி இருக்கு..ஸ்பூனால மாவை எடுத்து எடுத்து எடுத்து ஃபில் பண்ணனும்..ஒரு தட்டுக்கு ஊற்றி முடிக்கவே எனக்கு போரடிக்க ஆரம்பிச்சிருச்சு. எப்படி 6 தட்டுக்களுக்கு ஸ்பூன் ஸ்பூனா ஊற்றி இட்லி செய்வாங்களோ??? அவ்வ்வ்வ்வ்வ்....

சின்ன இட்லிகளாக இருப்பதால் 5 நிமிஷத்தில வெந்துருது..அடுத்த தட்டுக்கு எண்ணெய் தடவி இட்லி வார்த்து ரெடியா வைச்சிருந்தா வெந்த இட்லித் தட்டை எடுத்துட்டு இன்னொரு தட்டை வைச்சிரலாம். இட்லிகள் சில நிமிஷம் ஆறியதும் ஸ்பூனால எடுத்தா, அழகா வந்துருது.

அப்புறம் என்ன சாம்பாரை ஊற்றி சாப்பிட வேண்டியதுதான்!!

சாம்பார் இட்லி வாயில் போட்டா சும்மா வழுக்கிட்டு வயித்துக்குள்ளே போயிருது..நீங்க அதைச் சாப்பிட எந்த முயற்சியுமே எடுக்கத்தேவையில்லை! ;)

ஸ்பூனில் இட்லி வார்ப்பது கொஞ்சம் நச்சுப் புடிச்ச வேலையா இருந்தாலும், சாப்பிடும்போது its worth an effort -னு தெரியுதுங்க. சூப்பரா இருந்தது சாம்பார் இட்லி!

முன்பே ஒரு முறை சாம்பார் இட்லி போஸ்ட் செய்திருக்கேன், ஆனால் அது காஸ்ட்கோ எக் போச்சரில் செய்த இட்லிகள். கொஞ்சம் கொழுக்-மொழுக்னு இருக்கும், இந்த இட்லிகள் அழகா பட்டன் சைஸ்ல இருந்தது. ரோசாப்பூ ஒரு மாதிரி அழகுன்னா, மல்லிப்பூ இன்னொரு மாதிரி அழகு. இந்த இட்லி ஒரு அழகுன்னா, அந்த இட்லி இன்னொரு அழகு.டைமிருந்தா அதையும் ஒரு எட்டு எட்டிப்பாருங்க.. :)

Monday, March 12, 2012

முள்ளங்கி சாம்பார் & சேப்பங்கிழங்கு வறுவல்

விதவிதமாக சாம்பார் வைத்தாலும், வெறுமனே ஒரு காய் மட்டும் சேர்த்து வைக்கும் சாம்பாருக்கு ருசி அதிகம்தான். அதிலும் வெள்ளை முள்ளங்கி சாம்பாரில் போட்டால் தனி ருசியாக இருக்கும். வெகுநாட்களாக இங்கே வெள்ளை முள்ளங்கி வாட்டசாட்டமாக படா சைஸில் பயமுறுத்தும். அதனால் சின்னச்சின்ன சிவப்பு முள்ளங்கிக் கொத்துகள் மட்டுமே வாங்குவது வழக்கம். சமீபத்தில் சில நாட்களாக இந்தியன் ஸ்டோரில் ப்ரெஷ்ஷாக வெள்ளை முள்ளங்கிகளைப் பார்க்கிறேன்.

காய்கறிகள் பக்கம் போகையிலே பசேலென்ற கீரையுடன் வெள்ளைவெளேர் முள்ளங்கி என்னை வாங்கிட்டுப்போய் சாம்பார் வையேன்-னு கெஞ்சற மாதிரி(!)யே இருந்ததா..வாங்கிட்டு வந்து சாம்பாரும் வைச்சு சாப்புட்டாச்சு! :)

தேவையான பொருட்கள்
வேகவைத்த துவரம்பருப்பு -1/4கப்
முள்ளங்கி - பாதி (நறுக்கிய காய் அரைகப் வருமளவு)
புளிக்கரைசல் -1/4கப்
வெங்காயம்-1
தக்காளி-2
பச்சைமிளகாய்-1
சாம்பார் பொடி-2டீஸ்பூன்
மஞ்சள்பொடி-1/4டீஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை-ஒரு கொத்து
தேங்காய்த்துருவல்(விரும்பினால்) -1 டீஸ்பூன்
சர்க்கரை-1/2டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை
முள்ளங்கியை கழுவி வில்லைகளாக நறுக்கவும்.
வெங்காயம்,ப.மிளகாய்,தக்காளியை பெரிய துண்டுகளாய் நறுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவிட்டு கடுகு-சீரகம் தாளித்து வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
நறுக்கிய முள்ளங்கி சேர்த்து, மஞ்சள்தூள் உப்பு சேர்த்து சிலநிமிடம் வதக்கவும்.
புளிக்கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்.
காய் வெந்ததும் வேகவைத்து மசித்த பருப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
இறுதியாக தேங்காய்த்துருவல், சாம்பார்தூள் சேர்த்து நுரைக்கட்டி லேசாகக் கொதிவந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும்.

சேப்பங்கிழங்கு வறுவல்
இது சித்ராசுந்தர் வலைப்பூவில் பார்த்து செய்தது. முதல்முறை கிழங்கு குழைந்தது..இரண்டாம் முறை ஓரளவுக்கு சுமாரா(!) வேகவைத்து செய்துவிட்டேன். :) ரெசிப்பிக்கு நன்றிங்க!

தேவையான பொருட்கள்
சேப்பங்கிழங்கு -3
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/8டீஸ்பூன்
உப்பு
பூண்டு- 2 பற்கள்
தயிர் -1டேபிள்ஸ்பூன்
எண்ணெய்

செய்முறை
சேப்பங்கிழங்கை வேகவைத்து தோலுரித்து வட்டமான வில்லைகளாக நறுக்கவும்.

மிளகாய்தூள்-உப்பு-பெருங்காயத்தூள் மூன்றையும் ஒன்றாகக் கலக்கி, கிழங்கு வில்லைகள் மீது சீராகத் தடவி அரைமணி நேரம் ஊறவிடவும்.

தோசைக்கல்லை காயவைத்து 1 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சேப்பங்கிழங்குத் துண்டுகளை பரவலாக அடுக்கவும். பூண்டை நசுக்கிப் போடவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு வேகவிடவும்.

ஒருபுறம் வெந்ததும், மறுபக்கம் திருப்பி விட்டு கட்டியில்லாமல் கலக்கி வைத்த தயிரை ஸ்பூனால் தடவவும். இன்னும் சிறிது எண்ணெய் விட்டு முறுகவிடவும். பிறகு அடுத்தபக்கம் திருப்பி தயிரைத் தடவி முறுகவிட்டு எடுக்கவும்.

சுவையான சேப்பங்கிழங்கு வறுவல் ரெடி!


முள்ளங்கி சாம்பார்-சாதம்-சேப்பங்கிழங்கு வறுவல்! ஹெல்ப் யுவர்செல்ஃ~~ :)

Saturday, March 10, 2012

யாம் பெற்ற இன்பம்..

இன்றைய உலகில் தொலைக்காட்சி இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை விட இடையிடையே வரும் விளம்பரங்கள்..ஓஹ்..மாற்றிச் சொல்கிறேன் என்று நினைக்கிறேன்! ஒளிபரப்பாகும் விளம்பரங்களுக்கு இடையிடையேதான் நாம் மற்ற நிகழ்ச்சிகளையே பார்த்து வருகிறோம், கரெக்ட்டுங்களா? :)))))))

அவற்றில் ஒரு சில விளம்பரங்கள் சிரிப்பு மூட்டும், ஒரு சில விளம்பரங்கள் முகம் சுளிக்க வைக்கும்..சிலது எரிச்சலை மூட்டும்..சிலது அப்பொழுதே சேனலை மாற்றவைக்கும் அளவுக்கு சோகமாய்/பயமுறுத்துவதாய் இருக்கும். அப்படியான விளம்பரங்களில் சிலதை நீங்களும் பார்க்கணுமே....
ஹலோ,ஹலோ..நில்லுங்க,நில்லுங்க! சொல்லாமக் கொள்ளாம ஓடுனா எப்புடி,நம்ம என்ன அப்படியா பழகிருக்கோம்?? ஒரு ரெண்டு நிமிஷம் நின்னு பார்த்துட்டுப் போங்க! ;))))
******
இந்த விளம்பரம் "Chase" பேங்கினுடையது..சமீபத்தில் நடந்த கையால பந்துவீசிட்டு அதையக் கால்பந்துன்னு சொல்லிக்கிற(!!) "Super Bowl"சமயத்தில் வெளியானது. பையன் பந்தை உதைக்க, அது அக்கம் பக்கத்து வீடுகளில் கண்ணாடிகளை, காரை உடைக்கிறதாம்..உடனே அப்பா சேஸ் இன்ஸ்டன்ட் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் ஒவ்வொருத்தருக்கும் $200 டாலர் இன்ஸ்டன்ட்டா அனுப்பிருவாராம்! $200 டாலர் இன்ஸ்டன்ட் ட்ரான்ஸ்ஃபர்..அதுவும் 2-3 பேருக்கு! கொஞ்சம் ஓஓஓஓஓஓவரா இல்ல?? :))))))



இதைப் பார்த்தபொழுது எனக்கு ஒரு நம்மூர் விளம்பரம் நினைவு வந்தது. தாத்தாவும் பேரனும் வீட்டுக்குள் கிரிக்கெட் விளையாடி கண்ணாடிகள் உடையும். பேரன் உடைக்கையில் அவன் அம்மா வர, தாத்தா பேரனிடம் இருந்து பேட்டைப் பிடுங்கிட்டு "நான் தான் பேட் செய்தேன்" என்று சொல்லுவார். மருமகளும் பேசாமல் போய்விடுவார். அடுத்து தாத்தா பேட்டிங்கில் ஜன்னல் கண்ணாடி உடைய..பாட்டியிடம் தான் உடைத்ததாக பேரன் சொல்லிவிடுவான். உடைந்தது கண்ணாடியாய் இருந்தாலும் உடையாதது பாசப்பிணப்புன்னு சொல்வது போல இருக்கும் அந்த விளம்பரம்.:)
*********



இந்த விளம்பரத்தைப் பார்த்தாலே எரிச்சலாய் இருக்கும், உடனே சேனலை மாத்திடுவேன். இப்பக்கூட இதை ப்ளாக்ல போடணுமான்னு ரெம்ப திங்க் பண்ணித்தான் போட்டிருக்கேன்! ;) :)

மெத்தை விளம்பரத்துக்கு இப்படியுமா விளம்பரம் செய்வாங்க?? இந்த மாதிரி க்ரேஸி ஐடியாவெல்லாம் எப்படித்தான் இவங்களுக்குக் கிடைக்குமோ?? இந்த விளம்பரம்னு இல்ல, இந்த "Sit n Sleep"ன் எல்லா விளம்பரங்களுமே கொஞ்சம் இப்படித்தான் இருக்கும்!
:-} :-}
***************



இது JCPenny-கடையின் விளம்பரம். சமீபத்தில் அங்கு எல்லாப் பொருட்களுக்கும் கொள்முதல் விலைக்கு கொஞ்சமே கொஞ்சம் லாபம் வைத்து விற்பனை ஆரம்பித்தாங்க. அப்ப வந்தது இது!
மற்ற துணிக்கடைகளில் பலபேர்களைச் சொல்லி ஏமாத்தறாங்களாம்..JCPenny-ல Fair & Square-ஆம்!! இவர்களிடம் இதே சீரிஸ்ல இன்னும் பல போரடிக்கும் விளம்பரங்கள் உண்டு!

ராஜ்மஹால் பட்டுப்புடவைகளுக்குன்னு ஒரு விளம்பரம் வருமே..அதிலே ஒரு காதலி தன் காதலன் பெற்றோர்களை விதவிதமான அழகழகான பட்டுச் சேலைகளை உடுத்திப்போயே திருமணத்துக்குச் சம்மதம் வாங்குவாள். ஆனா இவிங்க எடுக்கற விளம்பரங்கள் பாத்தம்னா கடைக்குப்போகணும்னே தோணாதுங்க..விளம்பரம் முடியறதுக்குள்ள நாமளும் தூங்கிருவம்ல?? அப்புறம் எப்படிக் கடைக்குப் போக??! :)))))))

***********


ப்ரோக்ரெஸோ சூப்பின் விளம்பரங்கள் ஓரளவு சிரிக்க வைப்பது மாதிரி பரவாயில்லாமல் இருக்கும். இந்த விளம்பரம் உலகில் உள்ள ஆல் ரங்கமணிகளைக் குறிவைத்து எடுக்கப்பட்டது! ஒரு உண்மையை காமெடியாச் சொல்லியிருப்பாங்க. என்னதான் சொல்லுங்க..பெண்கள் மனசை ஆண்களுக்குப் புரிய வைப்பது பெரும்பாடு,சரிதானே?? ஹாஹாஹா!!
*********
அடுத்து வரும் விளம்பரம் எனக்கு மிகவும் பிடித்த விளம்பரம். cat food-க்கான விளம்பரத்துடன் ஒரு அழகான காதல் கதையைச் சொல்லியிருப்பாங்க..நீங்களும் பாருங்களேன்!



காதலி காதலனை அறிமுகப்படுத்த அவள் அம்மா வீட்டுக்கு கூட்டிப்போவாள். அங்கே இருக்கும் பூஸாரை விட்டுவிட்டு வர மனசே இல்லாமல் வருவாள். (இந்த ஊர்ல அப்பா-அம்மா தனியே பிள்ளைகள் தனியே இருப்பதுதான் வழக்கம்! ) காதலிக்குப் பூனைக்குட்டி பிடிக்கும் என்பதைக் கவனித்த காதலன் பூனைக்குட்டியை வாங்கி திருமணத்துக்குப் propose செய்வதுதான் இந்த விளம்பரம்.

காதலி வீட்டுக்கு முதல் முதல் போவதில் இருந்து ப்ரபோஸ் செய்து, கல்யாணம் முடிவுசெய்து, கலியாணம் செய்து, ஹனிமூன் ப்ளான் செய்வது வரை தொடர்ச்சியாக விளம்பரங்கள் இருக்குது. நேரமிருந்தா யு ட்யூப் போய் Fancy Feast adds என்று தேடிப்பார்த்து ரசியுங்கோ! :)))))
நன்றி வணக்கம்!

Monday, March 5, 2012

கோதுமை ரொட்டி

கோதுமை ரொட்டினு டைட்டிலைப் பார்த்ததும் Regular Wheat Bread ரெசிப்பி, பட்டர்-ஜாம் தடவிச் சாப்பிடலாம்னு ஒரு மைக்ரோ செகன்ட்(!) நீங்க நினைச்சாலும், நான் பொறுப்பில்லே! :))))
இதை கோதுமை மாவு அடைனும் சொல்லிக்கலாம், கோதுமை தோசைன்னும் சொல்லிக்கலாம், இல்லைன்னா கோதுமை ரொட்டினும் சொல்லிக்கலாம். [பூவை பூ-னும் சொல்லலாம், புய்பம்-னும் சொல்லலாம், இல்லன்னா நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம் காமெடி ரேஞ்சுக்கு கொண்டுவந்துட்டேன் பாருங்க! ஹிஹி..]

பொதுவா கோதுமை தோசைன்னா மாவு தோசை மாவு பக்குவத்தில கரைக்கணும், கட்டி தட்டும், அதில்லாம பொறுமையா கரைக்கணும். தண்ணி போதாதுன்னு கொஞ்சூண்டு எச்சா ஊத்துனா தண்ணி மாதிரி ஆகிரும். ஆனா இந்த ரெசிப்பில அந்த ரிஸ்க் இல்லைங்க. வெங்காயம், மிளகா,கறிவேப்பிலை கொத்துமல்லி எல்லாம் மாவோட சேர்த்து உப்பும் சேர்த்து கொஞ்சங்கொஞ்சமாத் தண்ணி விட்டு ஈஸியா கலக்கிரலாம். இட்லிமாவு மாதிரி இருந்தாப் போதும்.

சப்பாத்திக்குன்னா தண்ணி கரெக்ட்டா ஊத்தி 10 நிமிஷமாவது பிசைந்து 10 நிமிஷமாவது வைக்கணும். அப்புறம்தான் சப்பாத்தி செய்யமுடியும். அப்புறம் சப்பாத்தி/கோதுமைதோசைன்னா அதுக்கு சைட் டிஷ் எதாச்சும் கண்டிப்பா இருக்கணும். வெறுமனே அதை மட்டும் சாப்பிட முடியாது. ஆனா இந்த ரொட்டிக்கு சைட் டிஷ் ஆப்ஷனல். வெறுமனே ரொட்டிய மட்டுமே கூட சாப்பிடலாம், சுடச்சுட சாப்பிட சூப்பரா இருக்கும். :) அவசரமாச் செய்யறதுக்கு சுலபமான ரெசிப்பி இது. சிலர் சர்க்கரை மேலே தூவி சாப்பிடுவாங்கனும் கேள்விப்பட்டிருக்கேன். நேரமிருந்தா காரமா ஒரு சட்னியும் அரைச்சுக்குங்க. நான் செய்திருக்கும் சட்னி ரெசிப்பி இங்கே.


இந்தப் படம் 3 இன் 1!! சட்னி, மாவு, கல்லில் ஊற்றிய அடை மூணுமே ஒரே படத்தில கவர் ஆகிடுச்சு, இருந்தாலும் தனித்தனியா க்ளோஸ்-அப் ஷாட்ஸ் எடுக்கலன்னா கோவிச்சுக்காது? (சட்னி, கரைச்சமாவு, ஊத்தின தோசை எல்லாமேதான்!! ;)) அதனால் ப்ராப்பர் ரெசிப்பி follows!


தேவையான பொருட்கள்
கோதுமை மாவு -11/2 கப்
தண்ணீர் -1 கப் to 11/4கப்
வெங்காயம்-1
பச்சைமிளகாய்- 2
கறிவேப்பிலை கொத்துமல்லி இலை -கொஞ்சம்
உப்பு

செய்முறை
வெங்காயம்,ப.மிளகாய், கறிவேப்பிலை-கொத்துமல்லி இலையைப் பொடியாக நறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமைமாவு-தேவையான உப்பு இவற்றுடன் நறுக்கிய பொருட்களையும் சேர்த்து கலந்து, கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீரை விட்டு கலக்கவும்.

மாவு தோசை மாவை விட கெட்டியாகவும், இட்லி மாவை விட கொஞ்சம் தளரவும் இருக்கவேண்டும். [ "wow,what an explanation??!! மகி,நீ எங்கயோ போயிட்டே"-னு நீங்கள்லாம் புகழ்வது எனக்குக் கேக்குது,டாங்க்ஸுங்கோ! ;)))) ]

தோசைக்கல்லை காயவைத்து 2 கரண்டி (என்கிட்ட இருப்பது சின்னக் கரண்டி..அதனால 2, இல்லன்னா ஒரு கரண்டி மாவே சரியா இருக்கும்) மாவை ஊற்றி கெட்டியான தோசையாக வார்க்கவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, ஒரு புறம் வெந்ததும் திருப்பிப்போட்டு வெந்ததும் எடுக்கவும்.
வழமை போல, சுடச்சுடச் சாப்பிடுங்கனு என்னவரைக் கூப்பிட்டேன், வழமை போல அவரும் "எல்லாத்தையும் சுட்டு முடி, அப்புறம் ரெண்டு பேரும் ஒட்டுக்கா சாப்புடலாம்!"ன்னாரா..எல்லாம் சுட்டு அடுக்கியாச்சு..
நீங்களும் சாப்பிட வாங்க! 
~~~
Sending this recipe to Bachelor's Feast event happening at Jaleelaa akkaa's Samaiyal attakaasam


LinkWithin

Related Posts with Thumbnails